தேர்கால் சிக்கிய கர்ணனை
காப்பாற்ற நண்பன் இல்லை அங்கு
நான் சிக்குண்ட எல்லா தருணங்களிலும்
என் நண்பர்கள் நின்றார்கள் தோளோடு தோளாக
தந்தையின் நிழலிருந்து தனித்து வந்தேன்
கல்லூரி என்னும் பாடம் கற்க
தனியான நான், உங்களுடன் சேர்த்த உறவுதான்
எவ்வளவு புனிதமானது !
எனக்கு!
தந்தையானீர்கள் நான் பாதை தவறிய போது
தாயானீர்கள் நான் பசியறிந்த போது
பாசத்தை பொழிந்தபோது உடன்பிறந்தவர்களானீர்கள்
நாம் எல்லாம் பகிர்ந்தோம்
நம் சோகமும் பசியும் முதற்கொண்டு!
எதிர்கால ஏக்கம் நிரம்பிய கண்களுடன்
நாம் பகிர்ந்த இரவுகள் எத்தனை
அப்படி எத்தனை தூங்கா இரவுகள்
நம் கல்லூரி நாட்களில்
இன்று எல்லாம் இருந்தும்
அந்த இரவுகள் இல்லை என்னிடம்
உங்களுடன் மீண்டும் வாழும் அந்த இரவுக்கான
ஏக்கம் மட்டும் என் கண்களில்!
எழுப்பச்சொல்லி உறங்கிய நண்பனை
எழுப்பியபோது அவன் திட்டியதும் சுகம்
ஒரே பாடலுடன் நாம் பயணித்த
பேருந்து பயணங்கள் தான் எவ்வளவு இனிமை
அந்த பயணச்சீட்டு தொலைந்து போனாலும்
பயணங்கள் தொலையவில்லை என்னிடம் !
எத்தனை எதிர்பார்பில்லா நண்பர்கள் எனக்கு
ஆம் !
காலம் சுழன்று பிரியும் நிலையில்
நாம் அழுத கண்ணீருக்கும், வலிக்கும் விலையேது
அதில் கலங்கம் தான் ஏது?
காலத்தையும் வென்று நாம் இணைந்து தேடிய வேலைகள் எவ்வளவு
ஒவ்வொரு தேடலின் முடிவும் துக்கமான தோல்வியாகியது
நீங்கள்தான் அந்த துக்கத்தையும் சந்தோஷமாக்கியது!
ஆராத ரணத்தையும் ஆற்றினீர்கள் உங்கள் வார்த்தையால்
உங்களால் வென்று வந்தேன் வேலையை!
நீங்கள் இல்லையெனில் துக்கமே தூக்க முடியா சுமையாயிருக்கும்!
எனக்காக நீங்கள் காத்திருந்த இரவுகள் எத்தனை
இன்று எல்லாமிருந்தும் காத்திருக்கும் நண்பனில்லை
திரைக்கடல் தாண்டி திரவியம் தேடவந்தேன்
உடல் மட்டும் வந்தது! மனம் வரவில்லை!
ஒவ்வொரு ஞாயிற்று கிழமைக்காகவும் காத்திருக்கிறேன் நான்
என் செல்பேசி காத்திருக்கிறது உங்களின் அழைப்பிற்காக!
திருக்குறளானோம் நாம்
நீங்களின்றி நானில்லை !
நீங்களின்றி பொருளில்லை!
நன்றி என் நணபர்களே!
என்னை நானாக்கியதற்கு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment