பனித்துளி பூக்களுடன் விளையாடும் அதிகாலைப்பொழுதில்
கிழக்கே சூரியன் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தான்
அள்ளி முடிந்த ஈரக்கூந்தலுடன்
பச்சைப்பட்டாடை அணிந்த தேவதை எதிரில் வந்தாள்
அவள் கூந்தலிருந்து விழும் நீர்முத்துக்கள்
மழைநீர் போல் பூமியை நனைத்தது
பூக்களோ இம்முத்துக்கள் வேண்டும் என்று
தலைநீட்டி பூமியில் விழாமல் தடுத்துக்கொண்டிருந்தது
அடர்ந்த காரிருளில் ஏற்றிவைத்த முழுநிலவு போல்
நீ ஒற்றை செவ்வந்தி பூவை கொய்து சூடினாய்
அந்த பூ எதற்காக பூமியில் இருந்தது என்பதை உணர்ந்து
உன் கூந்தலில் ஆனந்த தாண்டவமாடியது
சூரியனும் சிறிது தடுமாறிப்போனான்
ஆம்! முழுநிலவு பிரகாசிக்கும் போது சூரியனுக்கு என்ன வேலை
நீயோ ! என்னை கண்டவுடன்
மேகத்தினுள் மறையும் நிலவு போல் மறைந்துவிட்டாய்
நானோ கலங்கரை விளக்கு தேடும் கப்பலானேன்
தூரத்தில் என் கலங்கரை விளக்கு புன்னகை வீசிக்கொண்டிருந்தது
நான் சூரியனையை கண்ட பனித்துளிப்போல் கரைந்துப்போனேன்
மஞ்சள் பூசிய முகத்தில்
மங்கலமாய் குங்குமம் இட்டு
மான் போல் துள்ளிவந்து
என் இதயத்தில் நுழைந்தவளே
காற்றிடம் என் காதலை சொல்லி தூது அனுப்பினேன்
ஆனால் காதலை சொல்லாத காற்று
உன் வாசனையை என் வீட்டில் நிரப்பிப்போனது
அன்று முதல் உன்னையே சுவாசிக்கிறேன்
நீரிடம் என் காதலை கவிதையாக்கி அனுப்பினேன்
கடலில் கலந்த நீர் அலையாகிவிட்டது
உற்றுக்கேள் அலை சொல்லும் கவிதையை
அதில் என் காதலிருக்கும்
பசுவிடம் உன்மேல் நான் கொண்ட
காதலை கதையாக்கிச்சொன்னேன்
அது அம்மா என்று அழைக்கும் குரல் கேட்கிறதா
அதனிடம் கேள்! சொல்லும் என் காதலை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment